Wednesday, September 30, 2009

நெஞ்சில் உரமுமின்றி...

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் தனது நாவல் ஒன்றில் கூறுவார்~சிறிய மீன்களுக்குப் பேசும் சக்தி கிடைக்குமேயானால் அவை தங்களை திமிங்கலங்களாக நினைத்துப் பேசத் தொடங்கும் என்று. அதுபோலத்தான் இருக்கிறது, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைப் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயகாவின் பேச்சு. ஐ.நா. சபையின் 64-வது பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கைப் பிரதமர் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் (எச்சரிக்கை?) என்ன தெரியுமா? எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்பதுதான்!

இலங்கைப் பிரதமரின் வாக்குமூலப்படியே பார்த்தாலும், கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போரின் முடிவில் 2.85 லட்சம் பேருக்கு மேலானவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொந்த மண்ணில் அகதிகளாக முள்கம்பிகளாலான வேலிக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களை அடையாளம் கண்ட பிறகு ஏனைய மக்கள் அவரவர் ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் இலங்கைப் பிரதமர்.

விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை  அடையாளம் பிரிக்கப் போவது யார்? வட இலங்கைப் பகுதியிலிருந்த பெருவாரியான மக்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டே. அப்படியானால், அவர்கள் அனைவரையும் தண்டிக்கப்போகிறதா இலங்கை அரசு? இனப்படுகொலையைத் தொடர இதுவேகூட ஒரு சாக்காக ஆகி விடாது என்பது என்ன நிச்சயம்?

தனது மக்கள் என்று தமிழர்களை சொந்தம் கொண்டாடும் இலங்கை அரசு, அவர்களுக்கு மருந்தும், உணவும், உடையும் அன்னிய நாடுகள் வழங்க வேண்டும் என்று கையேந்துவதிலிருந்தே, தனது கஜானாவிலிருந்து சல்லிக்காசுகூடத் தமிழர்களுக்குச் செலவிட அந்த அரசு தயாராக இல்லை என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது? முன்பே பலமுறை குறிப்பிட்டதுபோல, அது வளம் கொழிக்கும் அமெரிக்காவாகவே இருந்தாலும் மூன்று லட்சம் பேரைக் கம்பி வேலிக்குள் அமைக்கப்பட்ட முகாம்களில் ஐந்து மாதத்துக்கும் மேலாக சகல வசதிகளுடன் பாதுகாப்பது சாத்தியம்தானா?

ஆயிரக்கணக்கான அகதிகள் குடியமர்த்தம் என்கிற பெயரில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதைப்பற்றி எழுதினாலோ, பேசினாலோ, பயங்கரவாதிகளுக்குத் துணைபோனதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்கள் பாய்கின்றன. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி மகாகவி பாரதி எழுதியதுபோல, "இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்' என்பது ஈவிரக்கமே இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்டம் என்கிற போர்வையில் ஹலேஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் இலங்கைப் பிரதமர். இதன் மூலம் அம்பாறை மாகாணத்தின் விவசாய வளர்ச்சிக்கு உதவி பெறுகிறது இலங்கை அரசு. இந்த உதவிக்குக் காரணம் அகதிகளைக் குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பது என்பதுதான். ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மாகாணம், பெரிய அளவில் சிங்களவர்களைக் குடியேற்றிப் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை. தமிழர்களைக் குடியமர்த்துகிறோம் என்கிற போர்வையில் சிங்களவர்களுக்குத்தான் உதவும் இந்தத் திட்டம்.

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று என்ன தைரியத்தில் இலங்கைப் பிரதமர் கூறுகிறார்? அமெரிக்காவின் விரலசைப்புக்கு ஏற்பச் செயல்படும் ஐ.நா. சபைக்கே மறைமுக எச்சரிக்கை விடுமளவுக்கு இலங்கைக்கு தைரியம் வந்தது எப்படி? சீனாவின் முழுமையான ஆதரவு தனக்கு இருக்கிறது என்கிற ஆணவமா, இல்லை இந்திய அரசு கண்டும் காணாமலும்தான் இருக்கும் என்கிற துணிவா? இத்தனைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கையில் படுதுயர் அனுபவிக்கும் தமிழ் அகதிகளின் நிலைமை குறித்து வேதனைப்படும் நிலையில், இலங்கை அரசு ஐ.நா. சபை தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சி அளிக்காமல் என்ன செய்யும்?கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கின. அங்கே நடப்பது ஓர் இனப்படுகொலை என்று உணர்ந்து செயல்பட்டன. ஆனால் நமது இந்தியாவில் நடப்பது என்ன? இன்னும் 115 முகாம்களில் சுமார் 73,572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். சுமார் 30,000 பேர் வெளியே தங்கியுள்ளனர்.

கால் நூற்றாண்டு காலமாக இங்கே வசித்துவரும் இவர்கள் இன்றுவரை அகதிகள்தான். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க நமது அரசு தயாராக இல்லை.வங்க தேசத்திலிருந்து ஊடுருவி வரும் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் ரேஷன் அட்டையும், வாக்காளர் அட்டையும் வைத்திருக்கிறார்கள். கேட்டால் வங்காளிகள் என்று தப்பித்துக் கொள்கிறார்கள். தேர்தலில் நின்று ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினரான அவலம்கூட அசாமில் அரங்கேறியது. ஆனால், 25 ஆண்டுகாலமாக இங்கே இருக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்போதுகூட அகதிகள்தான்.காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது, மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவது மற்றும் கச்சத்தீவை மீட்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானம் நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் இந்தப் பிரச்னைக்குத் தீர்மானமான முடிவையும் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை எத்தனை காலம்தான் இலங்கை பயமுறுத்தப் போகிறது? நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், தனிமரியாதையுடனும் வாழ்ந்தால் மட்டுமே இந்தியா பாதுகாப்புடனும் தலைநிமிர்ந்தும் உலக அரங்கில் வலம்வர முடியும் என்கிற உண்மையை, தில்லித் தலைமைக்கு யார் உணர்த்துவது?

நெஞ்சுரம் கொண்ட கடைசிப் பிரதமர் இந்திரா காந்திதான் என்று தோன்றுகிறதே...

-
நன்றி தினமணி

No comments: